விளாத்திகுளம், டிசம்பர் 04 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மந்திக்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்கு ஒரு வழி பாதையை நம்பியே அந்த கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்தாண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக கிராமத்திற்கு செல்லும் மேம்பாலம் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உருக்குலைந்தது. இதனால் கிராம மக்கள் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல், அவசர தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.
இதுகுறித்த கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு மக்கள் பிரதிநிதியிடம் பாலம் கட்டுவதற்கான கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், மந்திக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பச்சைக்கொடி அசைத்து கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ரூபாய் 290 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார்நத்தம் முதல் எப்போதும்வென்றான் சாலையிடையே இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து அ. வேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கீழஈரால் இடையே ரூபாய் 480 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பிரதிநிதிகள் புதுராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



