நாகர்கோவில், ஏப். 8 –
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று குமரி மாவட்டம் வருகை தந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில் அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ‘ரோட் ஷோ’ நடத்த இருக்கிறார். இதற்காக வருகிற 15-ந் தேதி நாகர்கோவில் வருகிறார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியானது நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம் ஜி ஆர் சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 180 இடங்களுக்கு மேலாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். திமுக கூட்டணி கடந்த தேர்தலில் ஆட்சியைக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்கிறீர்களா என்று கேட்கிறீர்கள் ஆனால் நாங்கள் ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றுதான் சொல்கிறோம்.
தென் மாவட்டங்களில் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விஜய்யின் வருகையால் தென் மாவட்டங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று கேட்கிறீர்கள். ஏற்கனவே மக்கள் மனதிலே மாற்றம் வந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பிடிக்கும் என்கிற மாற்றம் வந்துவிட்டது. வேறு யார் வந்தாலும் எந்த மாற்றமும் வராது.
மெட்ரோ ரயில் திட்டமிட்டு நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். ஒரு அரசாங்கம், மெட்ரோ ரயில் வருவதற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை கொடுக்கக் கூட சரியான அதிகாரிகள் இல்லை. சரியான வழிகாட்டுதல் இல்லை. ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் இவர்கள் 10 மீட்டர், 5 மீட்டர் உள்ள இடங்களையெல்லாம் வைத்துத் தவறாக அந்த அறிக்கையைப் போட்டுக் கொடுத்ததால்தான் அந்த மெட்ரோ திட்டம் வர முடியவில்லையே தவிர, மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.
பாஜகவைப் பார்த்தால்தான் முதலமைச்சருக்குப் பயம். ஏனென்றால், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்களுடைய ஊழல்கள். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இ.டி வழக்குகள் இருக்கின்றன. எல்லா வழக்குகளையும் எடுத்துவிடுவார்கள் என்கிற பயம். அதனால்தான் பாஜகவைப் பற்றிப் பேசுகிறார். அண்ணாமலை புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களுக்கும் பிரச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
சாத்தான்குளம் வழக்குத் தீர்ப்பு அதிமுக கூட்டணிக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?
என்று கேட்கிறீர்கள். அது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இதற்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியில் நாகர்கோவில் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர். காந்தி, மாவட்டத் தலைவர் கோபக்குமார் மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநிலச் செயலாளர் மீனாதேவ் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.



