நாகர்கோவில், டிச. 8 –
கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின்படி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினரால் இன்று காலை அகஸ்தீஸ்வரம் வட்டம் ஆசாரிபள்ளம் அருகே ரோந்து பணி நடைபெற்றது.
அப்போது அனந்தன்பாலம் என்ற இடத்தில் வைத்து சந்தேகத்திற்கு இடமாக சொகுசு கார் வந்து கொண்டுண்டு இருந்தது. அதனை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றதால் துரத்தி மடக்கி பிடித்தனர். அப்போது கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதனை தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 1000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்து பொது வினியோக திட்ட அரிசி கோணம் அரசு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக கடத்தல் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்.



