மார்த்தாண்டம், அக். 27 –
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளங்கள் நிரம்பியுள்ளன. பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆற்றூர் சந்திப்பில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் காணப்படுகிறது. தற்போது கனமழையால் அந்த பகுதியில் குளம் போல் வெள்ளம் தேங்கி காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வர்கள் தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்த வண்ணம் உள்ளனர். மேலும் அருகில் அரசு பள்ளி கூடம் ஒன்று உள்ளது. பள்ளி மாணவ மாணவிகளும் பெரும் அளவில் அவதிப்பட்டு செல்கின்றனர்.
சேதமடைந்த சாலையை செப்பனிட கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தம் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் வாழை மரங்களை நட்டு வைத்து, மேலும் சில பகுதிகளில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீன்வலை போட்டு மீன்பிடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தினம் இரவில் ஏராளமான கனிம வளலாரிகளில் கல், மண், எம்சென்ட் போன்றவை அதிவேகமாக கொண்டு செல்வதால் தான் இந்த சாலை சேதமடைந்துள்ளதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



