திருவெறும்பூர், மே 2 –
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துவாக்குடி தெற்குமலை பகுதியில் நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் வசிக்கும் ராஜகோபால் மகன் கோவிந்தராஜ் என்கின்ற ரஞ்சித் என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருவெறும்பூர் வேலன் நகரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து துவாக்குடி தெற்கு மலையில் வசித்து வந்த நிலையில் மேற்படி கோவிந்தராஜன் அவரது அம்மாவும் அடிக்கடி அந்த பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் தன் தாயார் கோவிந்தம்மாள் பேச்சைக் கேட்டுக் கொண்டு கோவிந்தம்மாள் தூண்டுதலின் பேரில் தனது மனைவி என்றும் பாராமல் அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் விஜயலட்சுமி மேற்படி கணவருடன் பிரிந்து இரண்டு வருடங்களாக திருவெறும்பூரில் தனது தாயார் வீட்டில் வசித்துக் கொண்டு திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு பிள்ளைகளை கவனித்து வந்த நிலையில் கடந்த மாதம் 23.ம் தேதி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜயலட்சுமி துவாக்குடி தெற்கு மலை ஜிபிடி கல்லூரிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றிவிட்டு வெளியே வரும் பொழுது அவரது கணவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது தாயார் இருவரும் அவரை பின்தொடர்ந்து அசிங்கமான வார்த்தைகள் திட்டி உருட்டு கட்டையால் தலையில் ஓங்கி அடித்து கொலை மிரட்டல் செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக துவாக்குடி காவல் நிலையத்தில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவர் கோவிந்தராஜ் மற்றும் தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



