நாகர்கோவில், மார்ச் 16 –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1916 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். இதற்காக தேர்தல் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் என சுமார் 3,000 பேர் ஈடுபட உள்ளனர்.
இவர்களுடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 6கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். முதற்கட்டமாக வந்துள்ள துணை இராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலையில் அணிவிப்பு நடத்தினார்கள்.
மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அவர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். தக்கலை டிஎஸ்பி பார்த்திபன், எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் ரஜினி கட்சாங் உட்பட பலர் பங்கேற்றனர். தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் ஏற்கனவே ரௌடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தவிர பதட்டமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.



