திங்கள்சந்தை, நவ. 14 –
இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை சேர்ந்தவர் அருள் அரசு (59). சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அருள் அரசுக்கு அறிமுகமான நெய்யூர் முரசங்கோட்டை சேர்ந்த தொபியாஸ் மகன் டென்சன் (53), அவரது மகன் டைசன் (28) ஆகிய இருவரும் துபாயில் நல்ல வேலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய அருள் அரசு மகனை துபாய்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். இதற்கு விசா கட்டணமாக அவர்கள் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கேட்டு பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வேலை எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தந்தை மகன் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர்.
இது குறித்து அருள் அரசு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அங்கிருந்து புகார் மனு இரணியல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த இரணியல் சப் இன்ஸ்பெக்டர் ஆன்றோ கெவின் தந்தை மகனான டென்சன், டைசன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான் இது போன்று வேறு யாரிடமாவது வேலை வாங்கி தருகிறோம் என பணம் பறித்துள்ளனரா? என்ற தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே எற்கனவே கடந்த சில தினங்கள் முன்பு 40-க்கும் மேற்பட்டோர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


