நாகர்கோவில் ஜன 20
இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் SundaysOnCycle என்ற தலைப்பில் இந்திய மக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி நேற்று சைக்கிள் (மிதிவண்டி) பேரணி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வைத்து தொடங்கியது.
இந்த பேரணியில் சுறுசுறுப்புடன் இருந்தால் நோயின்றி வாழலாம் மற்றும் உணவே மருந்து போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நடைபெற்ற நிகழ்ச்சியை நாகர்கோவில் முதுநிலை தபால் அதிகாரி சுரேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை தபால் அதிகாரிகள் பரமேஸ்வரன், ஜாய்ஸ் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.