தருமபுரி, ஜனவரி 30 –
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சி வெங்கட்டம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதேமங்கலம் – வெங்கட்டம்பட்டி சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்பொழுது குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாலை பணி தொடங்கியதிலிருந்து வெங்கட்டம்பட்டி கிராமத்தில் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் குழாய்களை சீரமைத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை முறையிட்டனர். ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் வெங்கட்டம்பட்டி – தருமபுரி சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த அதிமன்கோட்டை காவல் துறையினர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது முறையான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிராமத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைத்து முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



