தருமபுரி, ஏப்ரல் 25 –
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தனியார் பஸ் வந்த போது, டிரைவருக்கு அருகில் இருந்த பார்சல் ஒன்று வெடித்து சிதறியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அபய குரல் எழுப்பினர். பஸ்சில் இருந்த பழனியம்மாள் என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவரை பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தருமபுரியை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர், பிரிட்ஜ்க்கு பயன்படுத்தக்கூடிய கியாஸ் சிலிண்டரை பி.பள்ளப்பட்டியை சேர்ந்த தீபன் என்பவருக்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். அதனை டிரைவர் போதிய பாதுகாப்பு இல்லாமல் தனது அருகில் வைத்து இருந்தது தெரிய வந்தது. பஸ் என்ஜின் வெப்பம் அதிகமாகி அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


