கன்னியாகுமரி, மே 19 –
குமரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தில் 2-ம் போக சாகுபடியான குங்குமப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதனால் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலையில் முதல் போக கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை வருகிற ஜூன் மாதத்தில் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள காட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால் மற்றும் பள்ளக்கால் பகுதி வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி கொடிகள் வெட்டப்பட்டு தூர்வாரும் பணி ஜேசிபி எந்திரம் மூலம் நடந்து வருகிறது. தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணி நடந்து வருகிறது.
இந்த பணி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவை சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் மேற்பார்வையில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கால்வாய் சீரமைப்பு பணி நடை பெறுவதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் வரை தங்குதடையின்றி செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.



