உலக தேங்காய் தினத்தையொட்டி, அரசம்பட்டி J.K 365 தென்னை ஆராய்ச்சி மையம் நிலையத்தில் விவசாயிகள், வேளாண் துறையினர் அதியமான் வேளாண்மை கல்வி மாணவர்கள் மற்றும் மேரிகோ நிறுவனத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை விரிவாக்க இணை பேராசிரியர் முனைவர் ஜனனி வரவேற்று தென்னை சாகுபடியின் தற்போதைய நிலைபற்றியும் தென்னையில் அதிகமகசூல் பெறுவதற்கு விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றியும் எடுத்துரைத்தார். இதையடுத்து இதில் அரசம்பட்டி J.K365 தென்னை ஆராய்ச்சியாளர் தென்னஞ்செடி கென்னடி விவசாயிகளிடையே பேசுகையில் இலங்கையில் நடந்த ஏபிசி மாநாட்டில், உலக தென்னை சாகுபடியிலும் தேங்காய் உற்பத்தியிலும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு காரணம் தென்னை சாகுபடியில் விவசாயிகள் காட்டி வரும் அதீத ஆர்வமும், அவர்களுக்கு அதிக மகசூலை தரக்கூடிய ரகங்களை உற்பத்தி செய்து தரக்கூடிய வேளாண் ஆராய்ச்சிகளும் ஆகும். இதில் இந்தியா முழுவதும் உள்ள 12 மாநிலங்களுக்கு தென்னை செடியாகவும், தேங்காய்யாகவும் கொடுத்து தென்னை வளர்ச்சியில் நமது அரசம்பட்டி தென்னை விவசாயிகளின் பங்கு 80 சதவீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தரமான எண்ணெய் சத்து மிக்க கொப்பரைகள் அரசம்பட்டி சுற்றுவட்டாரபகுதிகளில் கிடைப்பதால் தான் தமிழக அரசு தென்னைக்கு புவிசார் குறியீடு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசம்பட்டியை தென்னை நகரம் என அழைக்கப்படுகிறது. நெல், கோதுமை பயிர்களை அறுவடை செய்ய நவீன இயந்திரங்கள் வந்துள்ளன. தென்னை சாகுபடியிலும் தேங்காய் பறிக்க நவீன இயந்திரங்கள் வரவேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் வேளாண் துறையினர் ஈடுபட வேண்டும். அதே போல் தென்னை இங்கு தான் அதிகளவு பயிர் செய்யப்பட்டு உள்ள நிலையில் அரசம்பட்டியை மையமாக கொண்டு பன்னாட்டு ஏற்றுமதி நிலையம் மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமேனவும் பேசினார்.



