தருமபுரி, ஜூலை 9 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி ‘குமரவேல்’ என்ற தனியார் பேருந்து (பதிவு எண்: TN 29 BF 4700) தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. காரிமங்கலத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற டிரைவர் பேருந்தை ஓட்டி சென்றார்.
காரிமங்கலம் அடுத்த பொன்னேரி கிராமம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென நிலைதடுமாறி நெடுஞ்சாலையின் இடதுபுறமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பயணிகள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரிமங்கலம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரிமங்கலம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



