தருமபுரி, ஜூலை 16 –
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தருமபுரி மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 50 ரூபாயும், எருமை பாலுக்கு 60 ரூபாயும் விலையை உயர்த்தி தமிழக அரசு வழங்கிட வேண்டும். ஊக்க தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு மார்ஜின் தொகையான 1.25 மார்ஜின் தொகையாக 5% உயர்த்தி வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்கிட வேண்டும். கால்நடை காப்பீடு 100% மானியத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி பேசினார். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட விவசாய சங்கத்தினர் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணி, சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் பழனி, கரும்பு பிரிவு தலைவர் லோகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காமராஜி, கரும்பு பிரிவு செயலாளர் குமார், முன்னாள் பால்வளத் தலைவர் சில்க் சின்னசாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள், விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



