கன்னியாகுமரி, ஏப். 6 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக 3ம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்தார். அங்கு தனியார் விடுதியில் தங்கியவர் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கன்னியாகுமரி – கோவளம் ஊராட்சி கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கோவளம் மீனவ கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். முதலமைச்சர் வந்திருப்பது அறிந்த பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் வீட்டில் இருந்து வெளியே ஆர்வத்துடன் ஓடி வந்து அவருக்கு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் தங்களது கோரிக்கைகளையும் கூறினார்கள். இதில் பெரும்பாலான மீனவ மக்கள் கோவளத்தில் அமைந்துள்ள தூண்டில் வளைவு சிறிய அளவில் இருப்பதால் சீசன் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாகும் போது பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இதை நீட்டித்து தர வேண்டும் என என்ற கோரிக்கையை வைத்தார்கள்.
மேலும் கோவளம் ஊராட்சியை கன்னியாகுமரி நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். மக்கள் கோரிக்கைகளை கேட்டு அவர் இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி சென்றார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் மகேஷ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



