நாகர்கோவில், செப்டம்பர் 10 –
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் 2025 – 26ம் கல்வி ஆண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்திட அறிவுறுத்தப்பட்டு மாநில அளவில் பயிற்சி ஆனது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட அளவில் வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 420 வேதியியல் முதுகலைப் பாட ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மண்டலங்களில் மாவட்ட அளவில் பங்கேற்பாளர்களை கொண்டு 3 நாட்கள் உண்டு, உறைவிட பயிற்சியாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப் பணிமனையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கருத்தாளர்களாக கொண்டு செயல்படுவர். பயிற்சி வகுப்பு செப்டம்பர் 11ம் தேதி (இன்று) தொடங்கி நடைபெற உள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


