ஈரோடு, ஜூலை 21 –
ஈரோடு எஸ் பி அலுவலகத்திற்கு இன்று திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி தாலுகா பிரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (55) என்பவர் தனது உறவினர்களுடன் வந்து கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சென்னையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் எனது நண்பர் மூலமாக ஈரோடு பெருந்துறை வட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவி அறிமுகமாகினர். ஆன்லைனில் தொழில் செய்து வருவதாகவும் அதில் பணத்தை முதலீடு செய்தால் தினம்தோறும் மூணரை சதவீதம் லாபமும் மற்றும் 100 நாட்களுக்குள் பணத்தை இரு மடங்குகளாக லாபத்தை திருப்பி தருவதாக கூறி என்னிடம் அவர்களது அலுவலகத்தில் வைத்து கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி சுமார் 21 லட்சம் பணத்தை வங்கியின் மூலம் அந்த தம்பதிகளின் வங்கி கணக்கிற்கு நான் செலுத்தினேன். அதன்பின் ஒரு வாரத்தில் லாபமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அவர்கள் தந்தனர்.
அதன் பிறகு எந்த ஒரு லாபமும் இன்று வரை கொடுக்கவில்லை. நான் பலமுறை அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இருவருமே தொலைபேசியை எடுக்கவில்லை. அதன் பின் சந்தேகம் அடைந்து பெருந்துறை அடுத்த வெள்ளோடு கிராமத்தில் விசாரித்த போது அவர்கள் என்னைப் போன்று பலரிடமும் ஆன்லைனில் தொழில் செய்து தருவதாக பணத்தை பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் என்னிடம் வேண்டுமென்றே மோசடி செய்து சதி திட்டம் தீட்டி ஏமாற்றி உள்ளனர். எனவே எங்களை ஏமாற்றிய தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
இதைப்போல் ஈரோடு தாலுகா சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இந்த தம்பதிகள் மீது இன்று எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறேன். என் நண்பர் மூலமாக பெருந்துறை வட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் அறிமுகமாகினர். நாங்கள் ஆன்லைனில் தொழில் செய்து வருகிறோம். நீங்களும் அதில் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் தருகிறோம் என்று என்னிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி 11 லட்சம் பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். அடுத்த ஒரு வாரத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தனர். அதன்பிறகு தற்போது வரை எந்த ஒரு பணமும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. அவர்களைக் குறித்து விசாரித்த போது அவர்கள் இதைப் போன்று பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் இந்த மனுவில் கூறியுள்ளார்.



