நாகர்கோவில், மார்ச் 18 –
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வகையில் விளவங்கோடு தொகுதி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 870 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.69,700 பிடிபட்டது. குளச்சல் தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.63,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் ரூ. 10 லட்சத்து 18 ஆயிரத்து 520 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குளச்சல் தொகுதியில் மட்டும் இதுவரை அதிகபட்சமாக 7 லட்சத்து 51 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில், பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


