நாகர்கோவில், மார்ச். 20-
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில் பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்குள்ள நாகேந்திரன் (69) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுபோன்று தென்தாமரை குளம் போலீசார் கீழமனக்குடி பகுதியில் தோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோழி இறைச்சிக்கடை அருகே சட்ட விரோதமாக ஒருவர் மது பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்த போது சுப்பிரமணி (48) என்பது தெரிய வந்தது. சுப்பிரமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் கன்னியாகுமரி போலீசார் நாச்சியார் குடியிருப்பு பகுதிகள் ரோந்து பணியின்போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராகவன் (54) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இதுபோன்று சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


