நாகர்கோவில், ஜூன் 13 –
குமரி மாவட்ட வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து உள்ளது. அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
கடந்த வாரம் மருதம்பாறை, வட்டப்பாறை. கடையாலுமூடு ஆகிய பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன. அப்போது கடையாலுமூடு பகுதியை சேர்ந்த மத போதகரமான ராகேஷ் என்பரை யானை தந்தத்தால் குத்தியதில் அவர் பரிகாரமாக உயிரிழந்தார்.
இந்த சோகம் மறைவதற்குள் நேற்று முன்தினம் களியல் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இன்று காலை மாறாமலை வனப்பகுதியில் மீண்டும் ஒரு ஒற்றை யானை ஒருவரை தாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி (45) என்பவர் மாறாமலை பகுதிகளில் ஒரு தனியார் கிராம்பு எஸ்டேட்டில் தங்கி கூலி தொழிலாளியாக உள்ளார். இன்று காலை சுமார் 5 மணி அளவில் வழக்கம் போல் தனது வீட்டை விட்டு வெளியே வந்த போது, இருட்டில் பகுதியில் நின்ற ஒரு ஒற்றை யானை தந்ததால் வயிற்றுப் பகுதியில் குத்தி ரவியை தூக்கி வீசியது.
யானையின் தாக்குதலுக்குள்ளான ரவியின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சகத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பால் யானை சற்று பின்வாங்கி வனப்பகுதிகள் சென்றது.
யானை சென்றதும் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த ரெவியை பொதுமக்கள் உடனடியாக மீட்டு அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



