நாகர்கோவில், பிப். 10 –
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரின் இடது கை அக்கிள் பகுதியின் உள் சுமார் 10 ஆண்டுகளாக வலி இருந்தது. ஆரம்ப காலத்தில் அலட்சியத்துடன் போதிய மருத்துவம் செய்யாத காரணத்தால் அவரது கை உணர்ச்சி இல்லாமல் செயல் இழந்து விட்டது. இதன் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.
பின்னர் பல மருத்துவ மனைக்கு சென்றும் போதிய நிவாரணம் கிடைக்கவில்லை. இறுதில் கன்னியாகுமாரி அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிட்சைக்கு வந்தார். மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்த போது, அதிர்ச்சி சம்பவம் காத்து இருந்தது. அதாவது அவரது அக்கிள் உள் பகுதியில் ரத்த நாளத்தில் ஒரு கட்டி வளர்ந்து கொண்டு, கை விரல்களுக்கு செல்ல வேண்டிய ரத்தத்தை நிறுத்தியதும் அதனால் கை செயல் இழந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் மருத்துவக் கல்லூரி ரத்த நாளம் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நோபிள் தலைமையில் மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி அக்கிளில் இருந்த இரத்த நாளம் கட்டியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் கால் தொடை பகுதியில் இருந்து சிறிது இரத்த நாளம், அதாவது நரம்பு வெட்டி எடுத்து கட்டி இருந்த இடத்தில் வைத்து தைத்து வெற்றிகரமாக அவர் கையை காப்பாற்றினார்கள். தற்போது ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் தினேஷ் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
இது மருத்துவ துறையில் ஒரு சவாலான நிகழ்வாக கருதப்பட்டாலும், இது போன்ற அறுவை சிகிட்சையானது ஒரு சில பேர்பெற்ற தனியார் மருத்துவமனையில் மட்டும் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கன்னியாகுமாரி மாவட்டம் ஆசாரிப்பாள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக தமிழ் நாடு அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிட்சை மருத்துவர்கள் செய்து அசத்தி உள்ளார்கள். மருத்துவ குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், கண்காணிப்பாளர் கிங்சிலி, உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி, கலைக்குமார், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனி மோள் உள்ளிட்ட டாக்டர்கள் பாராட்டினர்.



