கன்னியாகுமரி, டிச. 15 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுரை தெற்கு டிவிஎஸ் நகரை சேர்ந்த சுவாமிநாதன் (61) என்பவர் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் நிர்வாக துறையில் பணியாற்றிய அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த சகீலா ஜோதி என்பவரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதற்கு சுவாமிநாதான் தான் காரணம் என்று அந்த பெண்ணும் அவர் கணவர் அய்யாசாமி பாண்டியன் (57) ஆகியோர் கருதினர். இதைத்தொடர்ந்து சம்பவ தினம் மதியம் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த அய்யாசாமி பாண்டியன் அங்கிருந்த சுவாமிநாதனிடம் எப்படி எனது மனைவியை பணிநீக்கம் செய்யலாம்? என்று கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.
இது குறித்து சுவாமிநாதன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


