கன்னியாகுமரி, ஆக 6 –
குமரி மாவட்டம் வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் நெடுஞ்சாலையில் மயிலாடியை அடுத்த புன்னார்குளம் பகுதியில் அமைந்துள்ளது கூண்டு பாலம். இதன் மேற்பகுதியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் தரைப்பகுதியில் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் மிக முக்கிய பகுதி இந்த கூண்டு பாலம் ஆகும். இந்த சாலை வழியே தினமும் இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள், தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூண்டு பாலம் கடந்த வருடம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரைப்பகுதி ரூபாய் 40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் அருகில் உள்ள கால்வாய்களில் இருந்து ஏராளமான தண்ணீர் சாலையில் புகுந்து பல இடங்களில் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இப்படி தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவுன்சிலர் பிரகாஷ் கூறியதாவது. குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான சாலைகளில் இந்த வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் சாலை ஒன்றாகும்.
இந்த சாலை வழியே ஆன்மீக தலங்களான உவரி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் ஆற்றங்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கும் செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்கும் போது சரியான திட்டமிடல் இல்லாமலும் தொலைநோக்கு பார்வை இல்லாமல் அவசரக் கதியில் சீரமைத்துள்ளனர்.
இதனால் தற்போது அருகில் உள்ள கால்வாய்களிலிருந்து வெளியேறும் தண்ணீர் போதிய வடிகால்கள் இல்லாமலும் இருக்கின்ற வடிகால்கள் முறையாக பராமரிக்காமலும், பழுதடைந்தும் இருப்பதால் தண்ணீர் செல்வதற்கு வழியின்றி சாலையில் வந்து தேங்குகிறது. இதனால் அதில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இதில் தனிக்கவனம் செலுத்தி பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



