ஈரோடு, ஆக.31.
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்ட வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மாவட்டக் கழக செயல்பாடுகள் மற்றும் தேர்தல் காலகட்டத்தில் தனக்கும், தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட சில சம்பவங்கள் மனதை பெரிதும் பாதித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் இனிமேலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து செயல்பட தனது மனம் இடம் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டு, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் கட்சியில் இருந்து விலகியிருப்பது ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



