ஈரோடு, 22.08.2026
ஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்ட உறுப்பினர்களுக்கு, கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி 225 கிராமங்களிலும், காணொலிக் காட்சி வழியாக ஒருங்கிணைந்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையேற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி வழங்கினார்.
இக்குழுக் கூட்டம் நடத்தப்படுவதினால் கிராமங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படுவது குறித்தும். குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது குறித்தும், அனைத்து கிராமங்களிலும் இக்கூட்டம் நடத்தப்படுவதன் மூலம் குழந்தை நேய கிராமங்களை உருவாக்கிடவும், ஈரோடு மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாவட்டமாக உருவாக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் குழந்தை உதவி மையம் 1098 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். இப்பயிற்சியானது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சண்முகப்பிரியா, இளஞ்சிறார் நீதிக் குழுமம் உறுப்பினர் சந்திரசேகர், ஆகியோர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



