படந்தாலுமூடு, நவம்பர் 3 –
குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் ஏராளம் மரங்கள் உள்ளன. இவற்றை அனுமதி இன்றி சில கும்பல் அடிக்கடி வெட்டி கடத்தி செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை படந்தாலுமூடு பகுதியில் சாலை ஓரமாக பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் பாதாம் மரம் ஒன்று காணப்பட்டது. அந்த மரத்தை இரவில் சில நபர்கள் வெட்டி முறிப்பதை பார்த்து பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த கும்பல் பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி, அவர்களை மிரட்டி அந்த பாதாம் மரத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இரவு நேரம் பார்த்து சாலை ஓரம் அரசு நிலத்தில் நின்ற மரத்தை சமூக விரோதிகள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



