தருமபுரி, ஜூலை 29 –
தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி பகுதியில் உள்ள நீலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பினோத் குமார், நாமக்கல்லில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்த அவர், புதிய கட்டிடம் மூலம் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் மேலும் விரிவுபெற்று, இளைஞர்கள், மகளிர் மற்றும் தொழில் முனைவோர் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் பல்வேறு தொழில் சார்ந்த இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் பயிற்சி நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெறும் அனைவரும் நிறுவனத்திலே தங்கி பயிற்சி மேற்கொள்ள விடுதிகளும், உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் அதிகாரிகள், பயிற்சி நிறுவனத்தின் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



