கிருஷ்ணகிரி, அக். 04 –
கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்மையில் ஓசூருக்கு வருகை தந்து பல்வேறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை அறிவித்து சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மாவட்டத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி நடவடிக்கை மேற்கொண்டதற்கும், முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் நிச்சயமாக முதலமைச்சர் அறிவித்தது போல சர்வதேச விமான நிலையம் அமையும். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலணையில் உள்ளது. எனவே விரைவிலேயே சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள இடம் இறுதி செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்கான அடிக்கல் நாட்டுவார் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிருஷ்ணகிரி, ஜேலார்பேட்டை ரயில் திட்டப் பணிக்கான சர்வே நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி இடம் மாற்றம் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
ஒசூர், பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவியல் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை செய்து கொடுக்க வேண்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்தப் பேட்டியின் போது கிராம கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசுதுரைராஜ் உள்ளிட்ட பல உடன் இருந்தனர்.



