கிருஷ்ணகிரி, ஜூலை 17 –
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய மிகவும் தெய்வீகமான மாதமாகும். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தேடித்தரும். இந்த ஆண்டு 2026ல் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை ஆடி மாதம் நீடிக்கிறது.
இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால், ஆடி மாதத்தின் முதல் நாளே ஆடி வெள்ளிக்கிழமையாகத் தொடங்குகிறது. 2026ம் ஆண்டின் ஆடி முதல் வெள்ளி நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி சேலம் ரோட்டில் உள்ள அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும், அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
பிரசித்தி பெற்ற அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் திருப்பதி கவுண்டர் தலைமையில் ஆடி 1 முதல் ஆடி 27ம் தேதி வரை, 262ம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதை ஒட்டி இன்று அதிகாலை 9 மணிக்கு கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, குங்குமம் பிரசாதம் விழா குழுவினர் வழங்கினார்கள். ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த சக்கரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் உள்ளிட்ட பிரசாதங்களை கொண்டு வந்து பக்தர்களுக்கு வழங்கினார்கள். ஏராளமான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அலங்கரிக்கப்பட்டிருந்த அவதானப்பட்டி ஸ்ரீமாரியம்மனை தரிசனம் செய்தனர்.
வரும் ஆகஸ்ட் 3, 4, 5, ஆகிய தேதியில் நடைபெறவிருக்கும் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ அருள்மிகு அவதானபட்டி மாரியம்மன் திருவிழா குழுவினர் கேட்டுக்கொண்டனர். பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் சேர்மன் சி.ஆர்.திருப்பதி கவுண்டர் தலைமையில் நடைபெறவிருக்கும் 262 ஆம் ஆண்டு அவதானப்பட்டி ஸ்ரீமாரியம்மன் திருவிழாவில் பரம்பரை அறங்காவலர் உறுப்பினர்களான சி.மாரியப்பகவுண்டர், பி.மாரியப்பன் கவுண்டர், திருப்பதிகவுண்டர், மகேந்திரகவுண்டர், சீனிவாசகவுண்டர், கிருஷ்ணமூர்த்திகவுண்டர், ஆகியோர் முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி இணை ஆணையர் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி துணை ஆணையர் ராஜா, தர்மபுரி கோட்டை மல்லிகா அர்ச்சுனன் திருக்கோயிலின் செயல் அலுவலர் சத்யா, காவேரிப்பட்டினம் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் மாரியம்மன், பூங்காவனத்தம்மன், காளியம்மன், சக்தி மாரியம்மன் கரகம் எடுத்து பம்பை ஆட்டம், சிலம்பாட்டம், விளக்குமாவு எடுத்தல், சாமி வேடம் இடுதல், சிவன், பார்வதி, கிருஷ்ணன், ராதை, ருக்கு, மகாமுனிவர், வேதவியாசர், நாதர் வேடம் இடுதல், அம்மாவிற்கு முன் வேடம் இடுதல், கேரளா சண்டி மேளம் ஆடுதல், அம்மனுக்கு கிடா வெட்டுதல், ஆகிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.
மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இத்திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் வந்திருந்து அம்மன் அருளை பெற்று செல்லுமாறும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறும் அவதானப்பட்டி, அனைத்து ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் கேட்டுக்கொண்டனர்.



