ஈரோடு, ஜூலை 27 –
நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதியில் தனியார் மதுபானக்கூடம் (11 to 11) மற்றும் எலைட் மதுபான பார் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி, நுகர்வோர் பாதுகாப்பு மையம், நம்பியூர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரம், குமார் நகர், ஸ்கை வே அருள் அவென்யூ, லக்கி நகர், சுபவேலன் நகர், அழகாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் மதுபானக்கூடம் (11 to 11) மற்றும் எலைட் மதுபான பார் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் மதுபானக்கூடம் செயல்பட்டால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மேலும், அப்பகுதியில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளதுடன், தினசரி ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு அருகிலேயே காமாட்சி அம்மன் திருமண மண்டபமும் அமைந்துள்ளதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.
இத்தகைய சூழலில் அப்பகுதியில் மதுபானக்கூடம் மற்றும் எலைட் பார் அமைக்கப்பட்டால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருமண மண்டபத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் தனியார் மதுபானக்கூடம் மற்றும் எலைட் மதுபான பாருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நம்பியூர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



