நாகர்கோவில், ஏப். 11 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம் ஆர் காந்தி நேற்று நாகர்கோவில் வடிவீஸ்வரம் ரத வீதி, இடலாக்குடி, வேதநகர், கண்ணங்குளம், லாலாவிளை, புத்தன்விளை சந்திப்பு, சரக்கல் விளை, இருளப்பபுரம் அப்துல் காதர் ஆஸ்பத்திரி, வல்லன் குமாரன் விளை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
அவருடன் பாரதி ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் ஏராளம் பேர் உடன் சென்றனர். எம் ஆர் காந்தி எம்எல்ஏவுக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்கெட் பகுதிகள், கடை வீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அவர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக கோவில்களிலும் தரிசனம் செய்தார்.
பிரச்சாரத்தில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ பேசியதாவது: குமரி மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சனை பெருமளவில் உள்ளது. எனவே தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் பெற்று தரப்படும். நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். நாகர்கோவில் தொகுதிக்கு மத்திய மாநில அரசுகளின் அதிகத் திட்டங்களை பெற்று தருவதில் முன்னுரிமை ஏற்படுத்தப்படும்.
நாகர்கோவிலில் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக சட்ட கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். மேலும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதையும் சட்டமன்றத்தில் நான் பேசி உள்ளேன். குறிப்பாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் சாலை வசதி, பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.



