எட்டையபுரம், நவம்பர் 12 –
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பெருமாள் கோவில் தெருவில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் அமைந்திருக்கிறது. அவரது இல்லத்தை 1973 ஆம் ஆண்டு வரலாற்றுச் சின்னமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த இல்லத்தில் பாரதியார் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகள் காட்சியாக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படங்களும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம தற்போது பராமரிக்கப்பட்டு வரும் இந்த வீட்டில் பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி இல்லத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனையடுத்து, இந்த இல்லம் பழமை மாறாமல் மறுசீரமைக்கப்படும்.
அதன்படி,பாரதியார் வாழ்ந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காக ரூ.1.53 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, சீரமைப்புப் பணிகள் தொடங்கி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியாரின் நினைவு தினம் என்பதால், அதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்ததனர். ஆனால், அதற்குள் பணிகள் நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வீட்டின் பழமை மாறாமல் இருக்கும் வகையில், கட்டடப் பணியில் கடுக்காய், கருப்பட்டி, சுண்ணாம்பு கலவை கொண்டு சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
டிசம்பர் 11ஆம் தேதி மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் என்பதால் அதற்குள் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இக்கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டியுள்ளதால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் போது எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்,
தாசில்தார் சுபா, துணைத்தலைவர் கதிர்வேல், பாரதி கூட்டுறவு நூற்பாலை முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் வர்த்தக அணி அமைப்பாளர் முனியசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், வார்டு செயலாளர் அருள் சுந்தர், மகளிர் அணி அமைப்பாளர் முருக லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



