குளச்சல், பிப். 7-
குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் பெத்தேல்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை குளச்சல் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் அவர்கள் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெத்தேல்புரம் சி எஸ் ஐ சபை போதகர் ராஜன் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார்.
இந்த மருத்துவ முகாமில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ டெண்டல் மருத்துவமனை ஆகியவற்றின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். இதில் பொது மருத்துவப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் மற்றும் நவீன பல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெத்தேல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 138 பொதுமக்கள் கலந்துகொண்டு இலவசமாகப் பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர்.
முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளை பெத்தேல்புரம் நட்புகள் இயக்கத்தின் நிர்வாகக் குழுவினர்களான ஷஜிலின் பிரபு, அமிர்த ஜார்ஜ், ஷஜிலின் தேவ பிரபின், ராபின், சதீஷ் குமார், ஸ்டாலின் வினோ மற்றும் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில், மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இயக்கத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக அக்கறையுடன் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



