தருமபுரி மாவட்டம், மெரப்பூரிலிருந்து தருமபுரிக்கு ரயில் பாதை இருந்தது. குறிப்பாக மெரப்பூருக்கு தருமபுரி இடையே இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ரயில்வே இரும்பு பாதை இருந்தது. டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு உலகப்போருக்கு வேண்டிய தளவாட சாமான்கள், ராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள் ரயிலில் கொண்டு செல்ல இந்த ரயில் பாதை முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பாலான ரயில்கள் நீராவி இன்ஜினில் இயங்கியதால், தற்போது உள்ள தருமபுரி உழவர் சந்தை எதிரில் உள்ள உயரமான கல் தூணுக்கு வந்து, தண்ணீர் நிரப்பிக் கொண்டு ரயில்கள் சென்றுள்ளன. ரயில்வே ஊழியர்களுக்கு உழவர் சந்தை அருகே குடியிருப்பு வசதியும் இருந்தது. இந்த கட்டிடங்கள் இன்றும் உள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின் மொரப்பூர் தருமபுரி ரயில்வே இருப்புப் பாதை வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் மறைந்தது. ரயில்வே பாதை இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டினர். சிலர் விவசாய நிலமாக பயன்படுத்தினார்கள். மொரப்பூர் தருமபுரி ரயில்வே பாதை மறைந்த பின் தமிழகத்தின் தலைநகரமான சென்னையுடன் நேரடியான தொடர்பு தருமபுரியுடன் துண்டிக்கப்பட்டது.
தருமபுரி
ரயில்வே இரும்பு பாதையை மீண்டும் கொண்டுவர தருமபுரி மாவட்டங்கள் கடந்த 70 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று ரூ.146 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பின்னர் ரூ.226 கோடியாகவும், தற்போது ரூ.400 கோடியாகவும் திட்ட மதிப்பீடு மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் இருந்து மொரப்பூருக்கு 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் சர்வே செய்யப்பட்டது. இதில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இன்னும் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. தருமபுரி நகரம் மற்றும் பல இடங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டு பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ரயில்வே பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணியம்பாடி கிராமத்தில் நிலங்களின் உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நேரடி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் மணியம்பாடி கிராமத்தில் ரயில் பாதை அமைப்பதற்காக 90 பட்டாதாரர்களான நில உரிமை யாளர்கள் நிலம் வழங்க சம்மதம் தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, தென்னக ரயில்வே சேலம் ழுதுநிலைப் பிரிவு பொறியாளர் எத்திராஜ், சார் பதிவாளர் அறிவழகன், ரயில் பாதை நில எடுப்பு தனித் தாசில்தார் கலைச்செல்வி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



