புளியங்குடி, நவ. 10 –
புளியங்குடியில் இடப்பிரச்சினை காரணமாக காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி செய்த சமாபாவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அம்பேத்கர் 5-ம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், விவசாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் வைத்திருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மாயமானதாக மாரியப்பன் புகார் அளித்த நிலையில், அதனை போலீசார் முறையான விசாரணை செய்யவில்லை என்று கூறி மாரியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி வள்ளியம்மாள் (43). இவர்களுக்கு சதீஷ் [23] என்ற மகன் உள்ளார். அவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் அதே பகுதியில் உள்ள கோவிலின் நிலத்தை பல வருடங்களாக குத்தகக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் பயிர் வைப்பது தொடர்பாக வள்ளியம்மாள் தரப்பினருக்கும், அவரது உறவினர்கள் வேலுச்சாமி, கணேசன், சொக்கன் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி புளியங்குடி காவல் நிலையத்திலும் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவத்தன்று வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகிய 3 பேர் சேர்ந்து வள்ளியம்மாள் பயிர் வைத்துக்கொண்டிருந்த விவசாய நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்ய முயன்றனர். இதனால் மன வேதனை அடைந்த வள்ளியம்மாள் நேற்று புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென போலீஸ் நிலையம் முன்பு தான் வைத்து, கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை திறந்து தலையில் மண் எண்ணையை ஊற்றினார்.
தொடர்ந்து அவர் உடலில் தீ வைக்க முயன்ற நிலையில் போலீசார் பார்த்து ஓடி வந்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். தொடர்ந்து அவர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புகார் அளிக்க வந்த நிலையில், போலீஸ் நிலையத்தின் முன்பே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



