கிருஷ்ணகிரி, அக். 4 –
கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில வேட்டியம்பட்டி அடுத்த ராயக்கோட்டையான் கொட்டாயில் 246 குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்க தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆபத்தான முறையில் பயணித்து வேட்டியம்பட்டி கிராமத்தில் வாங்கி வந்தனர். இதையடுத்து அக்கிராமத்திற்கு சென்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், ராயக்கோட்டையான் கொட்டாயில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சட்டசபையில் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன்பேரில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ அசோக்குமார் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி குறைகளைக் கேட்டார். அப்போது கிராமத்திற்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். ஆலமரம் பகுதியில் மயானம் அமைத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எம்.எல்.ஏ அசோக்குமார் வாக்குறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தாபா வெங்கட்ராமன், மாவட்ட மாணவரணி முருகன், கிளை செயலாளர் ராஜவேல், கோவிந்தன், ரவிக்குமார், குமார், ரஞ்சித் குமார், தனபால், லட்சுமணன், ராஜேஜ், ரமேஷ், சாவடி, திம்மராயன், சின்ராஜ், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.



