நாகர்கோவில், மார்ச் 6 –
நாகர்கோவில் கீழராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (32) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி (28). இவர் தட்டான்விளை பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு ரூ. 1 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை விஜயகுமாரி முறையாக திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.
இந்த விவரம் குறித்து விஜயகுமாரி தனது மகன்கள் ஆன சுபாஷ் (26), அஜய் கண்ணன் (24) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் தேவியிடம் தகராறு செய்து அவதூறு பேசி உள்ளனர். இது குறித்து தேவி தனது கணவர் அஜித்திடம் கூறியுள்ளார். இதை கண்டிக்கும் வகையில் சுபாஷ், அஜய் ஆகியோரை சந்தித்து அஜித் கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று முன்தினம் மாலையில் தட்டான் விளை என்ற பகுதியில் அஜித் வரும் போது, சுபாஷ் மற்றும் அஜய் கண்ணன் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்து இரும்பு கம்பியால் அஜித்தை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் அஜய் கண்ணன் மீது கோட்டார், நேசமணி நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. குற்ற பதிவேடு பட்டியலில் ‘சி’ பிரிவில் அவர் உள்ளார். அதுபோல் படுகாயம் அடைந்த அஜித் மீதும் வழக்குகள் உள்ளன அவரும் சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


