களியக்காவிளை, செப். 15 –
பளுகல் அருகே கண்ணுமாமுடு புத்தன் வீடு பகுதியை சார்ந்தவர் விஷ்ணு பிரசாத் (47). இவர் பழைய ரப்பர் சீட் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாறசாலையில் நர்சாக பணி புரிந்து வருகிறார். விஷ்ணுபிரசாத்க்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி ரப்பர் சீட் கடை திறக்காமல் இருந்து வந்துள்ளார். ஆகவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நர்சு சுஜா (42) வழக்கம் போல் காலை எட்டு மணிக்கு பாறசாலையில் நர்சு வேலைக்கு சென்றுள்ளார். மாலை ஐந்து மணிக்கு வந்து பார்த்த போது விஷ்ணு பிரசாத் வீட்டு வராந்தாவில் மூச்சின்றி படுத்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு காரக்கோணம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து பளுகல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


