கன்னியாகுமரி, ஏப். 13 –
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று கன்னியாகுமரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவட்டத்திற்கு உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்முறையாக கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் குமரி மாவட்டம் குறித்து வாய் திறக்காததால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தில் பொதுவான பிரச்சினைகள் பேசு பொருளாக இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சில பிரச்சனைகள் பிரதான பிரச்சனைகளாக இருந்து வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தினந்தோறும் பொதுமக்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகளான கனிமவள சூறையாடல், அன்றாடம் கனிம வள லாரிகளால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், கேரள கழிவுகளை குமரியில் கொட்டுவது குறித்தும், சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியை மேம்படுத்துவது குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பையும் அறிவிக்காமல் அனைவரையும் விசில் ஊதச் சொல்லி விட்டு தனது பரப்புரையை நிறைவு செய்ததால் 12 மணி முதல் வெயிலில் 4 மணி வரை அவரின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குமரி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை குறித்து பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மக்களை வெறும் விசில் மட்டுமே ஊத சொன்னது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



