தென்காசி, மே 15 –
தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலய ரத வீதியில் பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசும் தற்காலிக கழிப்பிட அறையை மாற்றக்கோரி பா.ஜ.கவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி நகராட்சி 30 வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு காசிவிஸ்வநாதர் சுவாமி கோவிலின் ரத வீதியான மேலமாசி வீதியின் வேன் ஸ்டாண்ட் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆண் மற்றும் பெண்களுக்கு என இரண்டு தற்காலிக கழிப்பிட அறை நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த தற்காலிக கழிப்பிட அறைக்கு நகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் வசதி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் மேலமாசி வீதி பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படும் நிலையில், தற்காலிக கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று வரை துர்நாற்றம் வீசும் கழிப்பிட அறை அகற்றப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நகர பா.ஜ.க தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான சங்கரசுப்பிரமணியன் தலைமையில் 30-வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் லட்சுமண பெருமாள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலிபுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர்மன்ற அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வருகிற 20ம் தேதி தற்காலிக கழிப்பிட அறையை மாற்றி தரப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



