நாகர்கோவில், ஜுன் 1 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, அதாவது வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடவடிக்கைகள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2026-க்கு இடையில் ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை (30 நாட்களுக்கு) மேற்கொள்ளவும், சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை (களப்பணி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்) மேற்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தாங்களாகவே, இணையதளம் வாயிலாக, தங்கள் விவரங்களை தெரிவிக்கலாம். ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை, கணக்கெடுப்பாளர்கள், வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர், முதன்மை கல்வி அலுவலர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இப்பயிற்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, முதன்மை பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



