தக்கலை, அக். 16 –
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையிலான குழுவினர் தக்கலை அருகேயுள்ள குமாரகோயில் பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தமிழக பதிவெண் கொண்ட கருப்பு நிற சொகுசு கார் சந்தேகத்திடமாக வேகமாக வந்து கொண்டு இருந்தது. அதனை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் வேகமாக திரும்பி நாகர்கோவிலை நோக்கி அதி வேகமாக சென்றது. உடனடியாக பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த மூன்று நபர்கள் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
அதனை தொடர்ந்து வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்ததில் சுமார் 1700 கிலோ அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த அரிசி பொது வினியோக திட்ட அரிசி என்பதும், கேரளாவுக்கு கடத்தி செல்ல பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை உடையார் விளையில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக கடத்தல் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.



