தருமபுரி, நவம்பர் 10 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக இருக்கும் கடையை அப்புறப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு ஆறு வழிச் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது . அதன் அருகே உணவகம் ஒன்று உள்ளது. சுங்கச்சாவடி அருகே சுமார் 500 மீட்டர் தூரம் வரை எந்த ஒரு கடைகளும் இருபுறங்களிலும் இருக்கக் கூடாது என்பதுதான் நடைமுறையில் உள்ளது.
ஆனால் பாலக்கோடு சுங்க சாவடி அருகே உள்ள உணவகத்தால் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளும், லாரி ஓட்டுனர்களும் கடைக்கு முன்பு வண்டிகளை நிறுத்துவதால் அக்கம்பக்கம் உள்ள குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த உணவகத்தில் இரவு நேரத்தில் அதிக இரைச்சலுடன் பாடல்கள் ஒளிபரப்புவதால் தூக்கத்தை தொலைக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதனால் இந்த கடையை அப்புறப்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த கடை மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



