ஈரோடு, மார்ச் 16 –
ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட பறக்கும் படை வாகனங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு என மொத்தம் 144 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து பின்னர் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தெரிவிப்பார்கள் வேட்பு மனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் அவர்கள் அனைத்து ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
வங்கி பரி வர்த்தனை தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவறாக யாராவது பரிவர்த்தனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



