திருவட்டாறு, ஜூலை 15 –
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1, 2 தேதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஆடி மாதம் முதல் தேதி ஆதிகேசவப் பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாகப் படைக்கப்படும்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆடிமாதம் 2ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவப்பெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை வரும் 18.ந்தேதி காலை 9 மணிக்குத்துவங்கி மதியம் வரை நடக்கிறது. பெருந்தமிர்து பூஜைக்கு முன்னதாக 49 கலசங்களில் புனி நீர் நிறைக்கப்பட்டு, கலசபூஜை நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீபலி விக்ரகங்களுக்கு திமிலை மேளம் முழங்க கலசாபிஷேகம் நடக்கிறது. கோவில் தந்திரி கோகுல் கலசபூஜை மற்றும் பெருந்தமிர்து பூஜைகளை நடத்துகிறார்.
ஆடி மாதம் முதல் தேதி (ஜூலை 17ம் தேதி) காலையில் ராமாயண பாராயணம் துவங்கும். ஆடி மாதம் 31ம் தேதி வரை (ஆகஸ்ட் 16) வரை தினமும் காலையில் கோவிலில் ராமாயண பாராயணம் நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.



