நாகர்கோவில், டிச. 04 –
சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நாகர்கோவிலில் (03.12.2025) ஹோட்டல் சஹானா காஸ்டலில் வைத்து நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வி. பழனிசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இணை இயக்குநர் விஜயலெக்ஷ்மி வரவேற்புரையாற்றினார்.
போலியான செய்திகள்:-
நிகழ்ச்சியை தொடர்ந்து தென் மண்டல தலைமை இயக்குநர் பழனிச்சாமி ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இதழியலில் தெளிவு, துல்லியம் மற்றும் துணிவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் கொண்டிருக்க வேண்டும் போலியான செய்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாகும் பல்வேறு சவால்களை சுட்டிக்காட்டிய அவர், இதழியல் துறையில் சுயமேம்பாட்டின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். கேமராவை வைத்துள்ள எவரும் செய்தியாளராக முடியும் என்றும் ஆனால் அறநெறி நிலைகளுடன் பணியாற்றும் ஒருவர் மட்டும் தான் உண்மையான செய்தியாளராக உருவாக முடியும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் தகவல் தொடர்புகளில் உள்ள இடைவெளியை நீக்கும் வகையில் பாலமாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் செயல்படுத்தி வரும் முக்கிய நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பொருளாதார மேம்பாடு
வேளாண் விளைபொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி குறித்து மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலக உதவி மேலாளர் முத்தையா பேசும் போது மார்த்தாண்டம் தேன், மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு உலகளவிலான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆணையத்தின் கீழ் ஏற்றுமதி உரிமம் பெறுவதற்கு விவசாயிகள் பதிவு செய்து கொள்வது குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
மத்திய அரசின் மானியம் திட்டங்கள்
இந்தப் பயிலரங்கின் இரண்டாவது அமர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி கார்த்திகேயன் உரையாற்றுகையில், முத்ரா கடனுதவி திட்டம் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற மத்திய அரசின் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக் கடனுக்கான திட்டம் குறித்து விவரித்தார். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். கல்விக்கடனுக்கான திட்டத்தில் 2,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர், 700 விண்ணப்பங்களுக்கு கல்விக் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டு 58 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொழிலாளர் நலன்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நாகர்கோவில் மண்டல் அலுவலகத்தின் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் – II திரு சுப்பிரமணி மற்றும் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் (மத்திய) பிரவீன் பாண்டி மோகன்தாஸ் உரையாற்றினர். புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர்கள், நீடித்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் பாதுகாப்பான, எளிமையான நடைமுறைகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில் அச்சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மீன் வள ஆராய்ச்சி கடல்சார் வளங்கள்:-
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தூத்துக்குடி மண்டல நிலையத்தில் மூத்த விஞ்ஞானியும் நிலையக் கண்காணிப்பாளருமான டாக்டர் லவ்சன் எட்வர்ட் கடல்சார் வளங்கள் குறித்தும் நீடித்த கடல்சார் மீன்பிடி மேலாண்மை குறித்தும் உரையாற்றினார். மத்திய அரசு கடல்சார் மீன்பிடி தொழில்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய கடலோரப்பகுதிகளில் 91.1 சதவீதம் மீன்வளங்கள் இருப்பதாக மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
இந்த ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொண்ட 80 ஊடகவியலாளர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உதவியாளர் சன்ட்ரா செபாஸ்டியன் நன்றியுரை வழங்கினார்.



