குளச்சல், ஜூன் 18 –
இரணியல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு திருவிதாங்கூர் பகுதி சேர்ந்த சிங்காரி மேளமடிக்கும் இசைக்கலைஞரான கதிஷ் (19) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கதிஷ் சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுள்ளார். இதை அடுத்து இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கதிஷ் சிறுமியிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி இரவு சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டில் மொட்டை மாடியில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் கதிஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு கதிஷ் சிறுமியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் அதிர்ச்சியில் இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர் அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது கதிஷ் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. உடனடியாக குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் போலிசார் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த இசை கலைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


