சுசீந்திரம், ஜூலை 4 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 51-வது வார்டு, பறக்கை அருகே உள்ள காமச்சன் பரப்பு பகுதியில் மழை பெய்தாலே தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழைநீர் நீண்ட நாட்கள் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடமாடுவதற்கும் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.
எனவே, காமச்சன் பரப்பு பகுதியில் நிலவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முறையான மழைநீர் வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்தி, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



