தஞ்சாவூர், மே 20 –
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக வளாகம் ரூபாய் 19 கோடியில் புனரமைப்பு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பொதுமக்களின் நலனிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டு சரஸ்வதி மகால் நூலகம் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுவர், மேற்கூரைகள், வளைவுகள் மற்றும் தளங்கள் சீரமைப்பு, நூலக கட்டிடத்தில் மழைநீர் உட்புகாத வண்ணம் மேற்பகுதியில் ஓடுகள் அமைக்கும் பணி, பழமையான முறையில் ஸ்டைல்ஸ் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் சரஸ்வதி மகால் நூலக வளாகத்தை சுற்றிலும் பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் நடைபாதை வசதிகள் மேம்படுத்தும் வகையில் புதிதாக கருங்கல் தளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தொல்லியல் துறையின் உதவி இயக்குனர் தங்கதுரை, சரஸ்வதி மகால் நூலகத்தின் நிர்வாக அலுவலர் மோகன், பொதுப்பணி துறையின் உதவி பொறியாளர் மயில்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



