நாகர்கோவில், மார். 3 –
கருங்கல், பாலவிளை என்னும் கிராமத்தில் பிறந்தவர் பொன்னப்ப நாடார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்டவர். சிறந்த வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டபேரவை எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 12.10.1976 அன்று பம்பாயில் விமான விபத்தில் மரணமடைந்தார்.
இவருடைய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 24.02.2026 அன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலையினை திறந்து வைத்து பெருமை சேர்ந்தார்.
அதனைத்தொடரந்து இன்று (03.03.2026) அவரது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலைக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், பொன்னப்ப நாடார் மகன்கள் பொன் விஜயராகவன், பொன் கிருஷ்ணகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, ஆர்.பொன்னப்ப நாடார் உறவினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



